பந்தலூர்: பந்தலூர் அருகே அரசு பள்ளியின் மதில்சுவரை உடைத்து புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் மதில் சுவரை உடைத்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. தகவலறிந்து சேரம்பாடு வனத்துறையினர் சென்று காட்டு யானைகளை விரட்டினர். நேற்று காலை 7 மணி அளவில் 2 காட்டு யானைகள் பள்ளி கேட்டை உடைத்துக் கொண்டு பஜார் பகுதியில் நுழைந்தது. யானைகளை பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.