சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்!!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 2,000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் இந்தத் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியிக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த  மாநிலத்திலும் இல்லாத அளவில் 32 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 32 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 40,34,207 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,40,537 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,96,817  நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    

சென்னை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 33வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக இரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

    

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.  தற்பொழுது, 75 நாட்களுக்கு அதாவது வருகின்ற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  இதன் மூலம் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

சென்னையில் இதுவரை 47,97,719 நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடைய நபர்களாக உள்ளனர். இவர்களில் 4,34,244 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்தம் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளின் சதவீதத்தில் 9.05% ஆகும்.  43,63,475 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும்.  எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  

இதுவரை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரம்

வ.எண். மண்டலங்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை,    முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை     

1.    திருவொற்றியூர்               8,152           1,53,921    

2.    மணலி                               4,827           1,11,266    

3.    மாதவரம்                       8,718           1,86,612    

4.    தண்டையார்பேட்டை 15,835            2,82,652    

5.     இராயபுரம்                       21,253            3,91,867    

6.    திரு.வி.க.நகர்                24,098            2,75,502    

7.    அம்பத்தூர்                       32,253            3,45,281    

8.    அண்ணாநகர்               50,557            4,35,685    

9.    தேனாம்பேட்டை       63,123            4,09,537    

10.    கோடம்பாக்கம்               56,251            4,39,253    

11.    வளசரவாக்கம்               23,184            2,80,662    

12.    ஆலந்தூர்                       33,635            2,52,505    

13.    அடையாறு                       51,903            3,57,192    

14.    பெருங்குடி                       27,612            2,68,576    

15.    சோழிங்கநல்லூர்       12,843            1,72,964    

        மொத்தம்                       4,34,244     43,63,475    

எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் 07.08.2022 அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Related Stories: