அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குக: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகளிடையே பதவி உயர்வு மற்றும் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஓய்வுபெறும் நாளன்று செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமலேயே பணப் பலன்களை சிலர் பெறுவதாகவும் அரசிடம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளன.  எனவே தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல்  ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுதலை தவிர்க்க வேண்டும். மேலும் தற்காலிக பதவி உயர்வு வழங்குதலை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பணியாளர்களின் இறப்பு, பணி ஓய்வு, நீண்டகால விடுப்பு ஆகியவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நடைமுறையில் விதிகளை பின்பற்றி நிரப்புவதற்கு தடையேதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

Related Stories: