திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடப்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த மாணவி சரளா, கடந்த 25ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் மறுநாள் (26ம்தேதி) பிரேதப பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் மரணம் குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், பள்ளி நிர்வாகி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.