திருமங்கலம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னோடு போட்டியிட தயாரா என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புதிய மாவட்ட செயலாளராக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று திருமங்கலம் தொகுதிக்கு வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தேனி எம்பி தொகுதியில் ரவீந்திரநாத் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை எங்களிடம் தான் உள்ளது. ஓபிஎஸ் கையெழுத்திட்டுத்தான் உதயகுமார் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தற்போது அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருமங்கலம் தொகுதியில் நிற்கட்டும். அவரை எதிர்த்து நான் நிற்கிறேன். என்னிடம் தனித்து போட்டியிட தயாரா? தேனியில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் வீட்டை நொறுக்குவோம் என பேசியுள்ளார். அவருக்கு நாவடக்கம் தேவை’’ என்றார்.