புதுடெல்லி: தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மூவர்ணக் கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளின் சுயவிவரப் படமாக (டிபி) வைக்கும்படி மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையில் பேசியதாவது: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ‘ஒவ்வொரு வீட்டிலும் மூர்வணக்கொடி’ ஏற்றுவதற்கான சிறப்பு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை) தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாள் என்பதால், ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மூவர்ணக்கொடியை சமூக ஊடக தளங்களில் தங்கள் கணக்குகளில் வைக்கப்படும் சுயவிவரப் படமாக (டிபி) வைக்க வேண்டும். ‘மன் கி பாத்’தில் மோடி பேசுகையில், ‘இந்திய பொம்மைத் துறை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளது. ரூ.300-400 கோடியில் இருந்த இதன் ஏற்றுமதி, ரூ.2,600 கோடியாக உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் கொரோனா காலத்தில் நடந்தது,’ என்று தெரிவித்தார்.