சென்னை : வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர்கள் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டியில் உள்ள குரங்கு அம்மை பரிசோதனை மையத்தில் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன.புனேவுக்கு மாதிரிகளை அனுப்பி பரிசோதித்ததில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் கேரளாவை சேர்ந்த கர்ப்பிணிக்கு உதவ மகப்பேறு மருத்துவர் தயார் நிலையில் உள்ளனர்.