ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினருடன் சிபிசிஐடி டிஜிபி ஆலோசனை

திருச்சி: திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியுமான ராமஜெயம் கடந்த 2012, மார்ச் 29ம் தேதி அதிகாலை கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணைரோட்டில் பொன்னிடெல்டா பகுதி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் வீசப்பட்டு கிடந்தது. ரங்கம் போலீசார், சிபிசிஐடி போலீசார், சிபிஐ அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் விசாரணை நடத்தியும் இதுவரை கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கவில்லை.கொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு கோர்ட் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த குழுவில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி மதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல்அக்தர் கண்காணித்து வருகிறார். இந்நிலையில் டிஜிபி ஷகீல்அக்தர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். சிறப்பு புலனாய்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்தும், ஏதேனும் முக்கிய தடயம் சிக்கியுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்ததோடு, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்பிறகு அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

Related Stories: