ஓசூர் அருகே காரில் கடத்திய ₹5.86 லட்சம் குட்கா, மதுபாட்டில் பறிமுதல்-2 பேர் கைது

ஓசூர் : ஓசூர் அருகே காரில் கடத்திய ₹5.86 லட்சம் மதிப்பிலான குட்கா, மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஹட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம், பத்தலப்பள்ளி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலம் சிரோஜி மாவட்டம் ஜோலாப்பூர் டேரூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(22) மற்றும் உடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த குலக்கஞ்சி கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ் குமார்(26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, காருடன் ₹3 லட்சத்து 84 ஆயிரத்து 396 மதிப்பிலான குட்கா மற்றும் 180 மி.லி., கொள்ளளவு கொண்ட 24 மதுபான பாட்டில்கள் என மொத்தம் ₹5 லட்சத்து 86 ஆயிரத்து 244 மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: