மதுரை: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி இன்னும் 6 மாதத்தில் துவங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மதுரையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கென இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எய்ம்ஸ் விரைவில் அமைய தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். கட்டிட வடிவமைப்பு குறித்த பணிகள் நடந்து வரும் நிலையில், 6 அல்லது 7 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தொடங்கும். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பரில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கோவை தனியார் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிறகு, மதுரை அரசு மருத்துவமனை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் மகத்தான சாதனை படைத்திருக்கிறது. இதுவரை 36 எலும்புகள் நோயாளிகளிடம் இருந்து கொடையாக பெறப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளிகள் 2 பேரிடம் இருந்து எலும்புகள், ஜவ்வுகள் எடுக்கப்பட்டன. 7 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.