‘ராம்சர்’ பட்டியலில் மேலும் 5 புதிய இடங்கள் பள்ளிக்கரனை, பிச்சாவரம் சதுப்பு நிலங்களுக்கு சர்வதேச அந்தஸ்து

புதுடெல்லி: சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மேலும் 3 இடங்கள் உட்பட 5 இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘ராம்சர்’ எனப்படும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேர்க்கப்பட்டு, அவை பேணி பாதுகாக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 3 இடங்கள் உட்பட மேலும் 5 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு மற்றும் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப் பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப்பு நிலம் ஆகிய 5 இடங்கள் இடம்பெற்று உள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் ‘ராம்சர்’ இடங்களின் எண்ணிக்கை 49ல் இருந்து 54 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி, சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் பெற்ற மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: