பேரணாம்பட்டில் பட்டப்பகலில் பரபரப்பு போதகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் திருட்டு-மர்ம ஆசாமிகள் கைவரிசை

பேரணாம்பட்டு :  பேரணாம்பட்டு அருகே பட்டப்பகலில் போதகர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி எம்.வி.குப்பம் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் போதகர் வில்சன் டேவிட்(59). இவர் நேற்று வழக்கம்போல வெளியே சென்றிருந்தார். ஆசிரியையான இவரது மனைவி ரோஞ்சிலன் பள்ளிக்கூடத்துக்கு சென்றிருந்தார். இவர்களது மகன் நீகா(20). இவர் நேற்று காலை 10 மணியளவில் குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்தில் லைசென்ஸ் எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

பின்னர் பகல் 12 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 40 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிக்கொண்டு வீட்டின் பின் பக்க கதைவ உடைத்துக்கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்க விடப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.

இந்த திருட்டு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மதபோதகரின் வீட்டில் 40 சவரன் திருட்டுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: