சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென்று முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக 2019ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக இந்த அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.