டெல்லி: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட இரு மாநில அரசுகளின் அனுமதி அவசியம் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஜான் பிரிட்டார்ஸ் என்ற கேரள மாநிலத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழ்நாடு, கேரளா அரசுகளின் சம்மதம் தேவை என கூறியுள்ளனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட தமிழ்நாடு அரசின் சம்மதம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநில அரசுகளின் சம்மதம் இருந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.