குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது: உலக சுகாதார அமைப்பை சேர்ந்த டாக்டர் வேதனை..!!

ஜெனிவா: உலகின் பல்வேறு நாடுகளிலும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பை சேர்ந்த டாக்டர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை தொற்று, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உட்பட 75 நாடுகளில் குரங்கம்மை பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

குரங்கு அம்மை என்பது அரிதான ஒரு வைரஸ் தொற்றாகும். இதனால் லேசான பாதிப்புகளே ஏற்படும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சில வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள் எனவும், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், குரங்கம்மை வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் டாக்டர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். போதிய முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் குரங்கம்மை பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை தொற்று இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Related Stories: