பொருளாதார பிரச்னை தீர்க்க அனைத்து கட்சி அமைச்சரவை: இலங்கை அதிபர் ரணில் புதிய முடிவு

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சிகள் உறுப்பினர்களும் இடம் பெறும் வகையில்  அமைச்சரவையை அதிபர் ரணில் விரிவாக்கம் செய்ய உள்ளார். இலங்கையின் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததால், நாட்டை விட்டு தப்பிய கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றம் மூலம் கடந்த 20ம் தேதி தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார். அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தால், நேற்று முன்தினம் நாட்டின் 15வது பிரதமராக தினேஷ் குணவர்தன பொறுப்பேற்றார். அவருடன் 18 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை சீரமைக்க, அனைத்துக் கட்சிகளும் இடம் பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய ரணில் முடிவு செய்துள்ளார். புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த 2 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அமைச்சரவையில் அதிகபட்சமாக 30 பேர் இருக்கலாம். மேலும் 12 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. அதிபராக பதவியேற்ற ரணில், உடனே பதவி விலக கோரி அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தது. இது குறித்து விவாதிக்க நாளை நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா நோட்டீஸ் வழங்கி உள்ளது. 

Related Stories: