மேட்டுப்பாளையம் அருகே ரூ.2 லட்சம் கொள்ளையடித்த ஆசாமி: தடயங்களை மறைக்க பூண்டு மண்டிக்கு தீ வைத்து ஓட்டம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே பூண்டு மண்டியின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடித்த ஆசாமி, தடயங்களை அழிக்க தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேட்டுப்பாளையம் புளூ ஹில்ஸ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் முகமது ஷபீக் (28). இவருக்கு சொந்தமாக ஜடையம்பாளையம் பகுதியில் பூண்டு மண்டி உள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், மறுநாள் காலையில்,  அவருக்கு அப்பகுதியில் பணிபுரியும் அஜ்மல் என்பவர் கடையில் தீப்பற்றி புகை வருவதாக தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற முகமது ஷபீக் அங்கு இருந்தவர்களுடன் இணைந்து தீயை அணைத்து விட்டு தனது கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்துள்ளார். சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து லாக்கரில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை எடுப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சியுடன் சிறுமுகை போலீசாரிடம் புகார் அளித்தார்.

கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே குதித்து பணத்தை ஆசாமி கொள்ளையடித்ததும், தடயங்களை அழிக்க 500 கிலோ மதிப்புள்ள பூண்டு மூட்டையுடன் கடையை தீயிட்டு அந்த ஆசாமி கொளுத்தியதும் தெரியவந்தது. மேலும் இவ்வழக்கில் சிறுமுகை ஆலாங்கொம்பு கருமொக்கை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பூபதி (32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: