மதுரை நகர் பகுதியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது

மதுரை: மதுரை கோமதிபுரத்தில் உள்ள வீட்டில் ஒருவர் சாராயம் காய்ச்சுவதாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கோமதிபுரம் மல்லிகை வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஸ்ரீரங்கபாளையத்தை சேர்ந்த சிவரஞ்சித்(33) என்பதும், அருகே உள்ள புதரில் அடுப்பு வைத்து யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சி வந்ததும் தெரிந்தது. வீட்டில் இருந்த 16 சாராய பாட்டில்கள் மற்றும் 2 பெரிய பீப்பாய்களில் சாராய ஊறல், கஞ்சா, 2 டூவீலர்கள், செல்போன், மான் கொம்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். போலீசார் கூறும்போது, ‘‘போதைக்கு அடிமையானதால் யூடியூப் பார்த்து சாராயத்தை காய்ச்சி குடித்துள்ளார். பல மாதங்களாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க சென்ட் தயாரிப்பதாக கூறியுள்ளார்’’, என்றனர்.

Related Stories: