மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. காயம் காரணமாக பும்ரா விலகியதை அடுத்து, சிராஜ் சேர்க்கப்பட்டார். ராய், பேர்ஸ்டோ இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ, ஜோ ரூட் இருவரும் சிராஜ் வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.ராய் 41 ரன் (31 பந்து, 7 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் பட்லர் - மொயீன் அலி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. மொயீன் 34 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டன் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கேப்டன் பட்லர் 60 ரன் எடுத்து (80 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஹர்திக் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட்டார்.