எல்லா படத்தையும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்: சூரி வேதனை

சென்னை: மணிபாரதி கதை மற்றும் இயக்கத்தில் ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரித்துள்ள படம், ‘பேட்டரி’. செங்குட்டுவன், அம்மு அபிராமி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் சூரி பேசியதாவது: இப்படத்தின் கதையை மணிபாரதி சொன்னபோது, இந்த மாதிரி எல்லாம் இப்போது நடக்கிறதா என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். ஆமாம் என்றார். ஒரு உயிருக்கு பிரச்னை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா, தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்னை என்றால் பதறுவோம். ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானாலும் இறந்துவிடுவான்.

அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் போய் நிற்பான். இன்னொன்று மருத்துவரிடம் சென்று வைத்தியம் பார்க்க நிற்பான். இதுதான் உண்மை. அப்படி இருக்கும்போது, சில மருத்துவ கும்பல் நம்முடைய பாசத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு சொல்லும் ஒரு படமாக ‘பேட்டரி’ இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டரில் படம் பார்க்கின்ற ரசிகர்கள், எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதுமட்டுமின்றி, முழு படத்தையும் ஈடுபாட்டுடன் பார்ப்பதில்லை. முன்னணி இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாகப் பார்த்துவிடுகிறார்கள். ஆனால், புது நடிகர்கள், புது இயக்குனர்களின் படங்களை பார்க்க தயங்குகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். அதற்கு ஏற்றபடி அனைவரும் படம் கொடுக்க வேண்டும்.

Related Stories: