முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் உள்பட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 21 பேர் நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் உள்பட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 21 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 2 அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கி உள்ளனர். இரு அணியினரும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக மாறி மாறி அறிவித்து வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து மேலும் 21 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பின்வரும் நபர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அவர்கள் விவரம் வருமாறு: எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.சுப்புரத்தினம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் டி.மாறன், அ.தி.மு.க. இலக்கிய அணி துணை செயலாளர் எம்.முருகேசன், தென்சென்னை வடக்கு(மேற்கு) மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் என்.ஜெயதேவி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளசை மஞ்சுளா பழனிச்சாமி, பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜி.சுரேஷ்பாபு, பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் வி.திருநாவுக்கரசு. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் என்.ஜவகர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.தயாளன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.சரவணன்.

மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பசுவை என்.சதீஷ், கும்பகோணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.ஆர்.வி.எஸ்.செந்தில், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் எம்.ஏ.பாண்டியன். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் வி.கே.பாலமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பரிவு இணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், கும்பகோணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் ஆர்.சிவக்குமார், கும்பகோணம் மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஏ.சுகுமாரன்.

கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கே.ஜி.பரத், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணை செயலாளர் எல்.சதீஷ், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.சதீஷ்ராஜ், குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் செயலாளர் நாஞ்சில் கே.எஸ்.கோலப்பன் ஆகியோர் ஆவர்.இவர்களுடன் கட்சி தொண்டர்கள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: