லீவு விட்டாச்சு... டூர்னு பிளான் பண்ணாலே லிஸ்ட்ல முதல்ல இடம் பெறும் இடம் கொடைக்கானலாகத்தான் இருக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என சுற்றுலாப்பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். பொதுவாக, கொடைக்கானலுக்கு செல்லும் பலர் பிரையண்ட் பூங்கா, ேகாகர்ஸ் வாக், குணா குகை, நட்சத்திர ஏரியில் படகு சவாரி இப்படி ஒரு வட்டத்துக்குள்ளே சுற்றுலாவை முடித்துக் கொள்வதுண்டு. ஆனால், அதையும் தாண்டி அற்புதமான இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம்.
ஏன் நிறைய பேர் இங்கே போறதில்லைன்னு யோசிச்சா ரெண்டே விஷயம்... ஒண்ணு தூரம்... மற்றொன்று போதிய பஸ் வசதியில்லாததது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து 34 கிமீ தொலைவில் இந்த மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சூழல் சுற்றுலா மையத்தில் ஏரி ஒன்றும் உள்ளது. இந்த ஏரியில் பரிசல் படகு, துடுப்பு படகு சவாரி செய்து மகிழலாம். ஏரிக்கரையில் குதிரை சவாரியும் போகலாம். சூழல் சுற்றுலா மையத்திற்கு நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20, கேமரா கட்டணமாக ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.