தர்மபுரி: தர்மபுரியில் இன்று நடந்த அரசு விழாவில் 28,639 பயனாளிகளுக்கு ரூ.254 கோடியே 59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.33.96 கோடியில் 421 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.33.96 கோடியில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்து பேசினார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இன்று தர்மபுரிக்கு வருகை வந்தார். சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்த அவருக்கு, மாவட்ட எல்லையிலும், தேவரசம்பட்டி முதல் அரசு கலைக்கல்லூரி வரையிலும் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு ரூ.33.96 கோடியில் 421 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.33.96 கோடியில் முடிவுற்ற 33 திட்டப்பணிகளை திறந்து வைத்ததுடன், பல்வேறு துறைகளின் சார்பில் 28,639 பயனாளிகளுக்கு ரூ.254 கோடியே 59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த விழாவை தொடர்ந்து, தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஜோதி மஹாலில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பு அணிகள் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, கிருஷ்ணகிரி சென்றார். கிருஷ்ணகிரி எல்லையில் மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு காவேரிப்பட்டணம் பையூர் சந்திப்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பின்னர் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே கலைஞர் திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவுற்ற ரூ.41 ேகாடியே 51 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான, புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட 500 திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். ரூ.147 கோடியே 92 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதிதாக 709 திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10,709 பயனாளிகளுக்கு ரூ.326 கோடியே 93 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் ரூ.516 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணி, நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முடித்து, இரவு 7 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இரவு கிருஷ்ணகிரி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை திருப்பத்தூருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
