சென்னை பெருங்களத்தூரில் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்

தாம்பரம்: சென்னை தாம்பரத்தை அடுத்து பெருங்களத்தூரில் பொதுமக்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. பெருங்களத்தூரில் உள்ள இரண்டு ரயில்வே கேட்டுகளில்  ஒன்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணிக்காக மூடப்பட்டது.

இதனால் மற்றோரு ரயில்வே கேட் வழியை பெருங்களத்தூர், பீர்க்கங்கரனை,சீனிவாசநகர்,குண்டுமேடு உள்ளிட்ட சுற்று வட்டார மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நேற்று மாலை ஐந்து மணிக்கு மூடப்பட்ட ரயில்வே கேட் மாலை 6.30 மணி வரை திறக்கப்படவில்லை. இதனை கண்டித்து மக்கள் பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

இதனால் செங்கல்பட்டு பீச் மின்சார ரயில், பீச் செங்கல்பட்டு மின்சார ரயில் பெருங்களத்தூரில் நிறுத்தப்பட்டது. தாம்பரம்,விழுப்புரம் ரயில் இரும்புலியூரில் நிறுத்தப்பட்டது. தென்மாவட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போலீசாரின் பேச்சு வார்த்தைக்குப்பின் இரவு 7.30 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்ற பின் ரயில் போக்குவரத்து சீரானது.

Related Stories: