பணியில் இருக்கும்போது உயிரிழந்த 6 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த 6 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று வழங்கினார். அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2021-22ம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின்படி 6 இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு நேற்று ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பணிநியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன், பழங்குடியினர் நலத் துறை இயக்குனர் எஸ்.அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரின் நேர்முக உதவியாளர் சு.பார்த்திபன் ஆகியோர்  உடனிருந்தனர்.

Related Stories: