சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து 1,10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கே.ஆர்.எஸ், மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியில் இருந்து 1,10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்திருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உள்ளது.