சென்னை: தமிழகத்தை துண்டாடுவோம் என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜ சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற வெறித்தனமான கூச்சல் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். இதற்கேற்பவே நயினார் நாகேந்திரனின் விபரீதப் பேச்சு அமைந்துள்ளது.