சென்னை: தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து, தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுடன் முடிந்த 4 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,016 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஒன்றிய அரசு, தங்கத்துக்கான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி வரி அதிகரிப்பை தொடர்ந்து தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது.
வரி உயர்வு அறிவித்த அன்றே, அதாவது 1ம் தேதியே தங்கம் விலை கிராமுக்கு ரூ.107 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,785க்கும், சவரனுக்கு ரூ.856 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,280க்கும் எகிறியது. 2ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,336க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.
அதனால், தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல், சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் நகை விற்பனையானது. 4ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை மேலும் உயர்ந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,798க்கும், சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,384க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்வை சந்தித்தது. நேற்று கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,016 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.