சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை தேமுதிக நிர்வாகிகள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேமுதிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வரும் தனியார் தொலைக்காட்சிகளையும், பத்திரிகைகளையும் தேமுதிக தலைமை கழகம் வன்மையாக கண்டிக்கிறது.