சார்ஜாவுக்கு கடத்த முயன்ற சவுதி கரன்சி பறிமுதல்; சென்னை பயணி கைது

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.34.23 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால் கரன்சியை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்லும் கல்ப் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனர். சூட்கேஸ்க்குள் ஏராளமான காகித கவர்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தனர். ஒவ்வொரு கவருக்குள்ளும் 500 சவுதி ரியால் கரன்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 339 கவர்களில் சவுதி ரியால் கரன்சிகள் இருந்தன.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.34.23 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், சவுதி ரியால் கரன்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பயணியின் பயணத்தையும் ரத்து செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: