ஆவடி: ஆவடியில் முக்கிய சாலைகள் இருளில் மூழ்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். ஆவடி பருத்திப்பட்டு, திருவேற்காடு, சுந்தரசோழபுரம், கோளடி, அயப்பாக்கம், அயனம்பாக்கம், அம்பத்தூர் தொழில்பேட்டை, மதுரவாயல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. சுந்தரசோழபுரம் கிராமமக்கள் இந்த சாலை வழியாக ஆவடி ரயில் நிலையம் பேருந்து நிலையம் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
தினசரி பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணியர் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக குறுகிய சாலையாக இருப்பதாலும், மின்விளக்கு இல்லாததாலும், அதிக விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்த சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.