கும்பகோணம் அருகே பயங்கரம் ரவுடி வெட்டிக்கொலை: முகமூடி கும்பல் வெறிச்செயல்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே முகமூடி அணிந்த மர்ம நபர்களால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே நெல்லித்தோப்பை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (42). இவர் மீது அம்மாபேட்டை, கும்பகோணம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது மனைவி தேவிகா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் மாமியார் வீட்டில் குடும்பத்தோடு புண்ணியமூர்த்தி தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை புண்ணியமூர்த்தி, நண்பர்களுடன் கொரநாட்டு கருப்பூர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே பாலக்கட்டையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த 4 பேர், புண்ணியமூர்த்தியை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார்.  இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து பழிக்குப்பழியாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரிக்கின்றனர். முகமூடி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: