அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.தொடர்ந்து, டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி:ஒரு குடையின் கீழ் இன்றைக்கு எடப்பாடியார்தான் ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்ற அந்த குரல் அதிமுகவினர் மத்தியில் ஒலிக்கிறது. இது வருகிற 11ம் தேதி ஒரு செயல் வடிவம் பெறும். யாரையும் அவமரியாதை செய்யவேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது. முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியாரும் அதுபோன்ற செயல்களில்  ஈடுபடவேண்டாம்  என்று அமைதிப்படுத்தினார். மேடையில் நடந்தவைகளை நீங்கள்  இருட்டடிப்பு செய்யாதீர்கள்.

அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு மட்டும்தான். பொதுக்குழுவில் எடுக்கின்ற முடிவு ஒற்றைத் தலைமை தான் கழகத்துக்கு வேண்டும் என்பது. அது நிச்சயமாக 11ம் தேதி நிறைவேறும். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. விரும்பத்தகாத சம்பவம் எது நடைபெற்றாலும் அது கண்டனத்திற்குரியது. இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் நீங்கள், மன உளைச்சலில் அவர் (ஓ.பன்னீர்செல்வம்) இருக்கிறார் என்று தெரிவித்தீர்கள். எதற்கு இந்த மன உளைச்சல். ஊரோடு ஒத்து வாழவேண்டும் என்று எதற்கு தெரிவித்தார்கள். ஒட்டுமொத்தமாக எல்லோரும் விரும்பும்போது, அந்த ஒற்றைத் தலைமை, ஒற்றை குடையின் கீழ் அனைவரும் வந்துவிட்டார்கள். அப்படி இருக்கும் போது நாமும் தானே ஆதரவு தரவேண்டும். ஆதரவு தராமல் நீதிமன்றத்தை அணுகுவது, தேர்தல் ஆணையத்தை அணுகுவது, பிரச்னைகளை உருவாக்குவது, இவை அனைத்தும் அவருக்கு மன உளைச்சல் இல்லை. கட்சியினருக்குத் தான் மன உளைச்சல். தொண்டர்களுக்குத்தான் மனஉளைச்சல்.

தொண்டர்கள் இது  எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம், ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம், நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் கலகம் செய்கின்ற அளவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டாரே என்று ஆதங்கப்பட்டு வருகிறார்கள். பாஜவை பொறுத்தவரையில் மூன்றாவது கட்சிதான். எந்த ஒரு மூன்றாவது நபர் தலையீட்டையும் அதிமுக எந்த காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனை விரும்பவும் இல்லை. அவர்களும் தலையிடவில்லை. நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தலையிடாத விஷயத்தை நீங்கள் எப்படிக் கேட்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: