உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.
60 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது. காண்டூர் கால்வாயின் மொத்த நீளம் 49 கிமீ. ஆகும்.
பல இடங்களில் கால்வாயின் கரைகள் சேதமடைந்ததால், அவற்றை சீரமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கியது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சீரமைப்பு பணியை முடித்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.ஆனால், தற்போது பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன. குறைவான ஆட்களே பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தாமதமாகும். எனவே, பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.