பயணிகள் சிரமத்தை தவிர்க்க பேருந்துகளை நடுரோட்டில் நிறுத்தக்கூடாது: ஓட்டுநர்களுக்கு எம்டிசி உத்தரவு

சென்னை: உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கிளை மேலாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர  போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பேருந்துகளை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய  பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து  நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளியோ பேருந்தை நிறுத்துவதால், பயணிகள்  சிரமத்துடன் ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

இதனால்  பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண  விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது. எனவே, அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் தமது  பேருந்தை சாலையின் இடதுபுற ஓரமாக உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிவிடுமாறும் பேருந்தை  சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கண்டிப்பாக  நிறுத்தக் கூடாது. இந்த உத்தரவு பின்பற்றப்படுவது குறித்து கிளை மேலாளர் உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும். மேலும்  பயணச்சீட்டு பரிசோதகர்களை முழுமையாக ஈடுபடுத்தி மாநகர போக்குவரத்துக் கழக  பயணச்சீட்டு வருவாய் முழுமையாக எய்துவதற்கு உதவி மேலாளர் (வருவாய் - வடக்கு,  தெற்கு) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: