சென்னை: தொண்டர்கள் அத்தனை பேரும் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் தெரிவித்தார். அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் ஜெ.சி.டி.பிரபாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒற்றை தலைமைக்கு இடமில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9ம் தேதி சேலத்தில் பேசும் போது சொன்னார். 14ம் தேதி தலைமை கழகத்தில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. 13ம் தேதி ஒருங்கிணைப்பாளருக்கு தொடர்பு கொண்டு எதற்காக கூட்டம் கூட்டப்படுகிறது என நான் கேட்டேன். இந்த ஆண்டு பொதுக் குழு கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்களை அழைக்க முடியாது என்பதை விளக்க வேண்டும் என்பதற்காக என்று அவர் சொன்னபோது நான் ஒப்புக்கொண்டேன். பின்னர், கூட்டம் தொடங்கிய போது திடீரென்று முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி எழுந்து நின்றார். அப்போது, அவருக்கு மைக் கொடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தான் சொன்னார்.