ஒன்றிய அரசுக்கு அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை: மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட நிதியுதவிகளை உயர்த்த வேண்டும்

புதுடெல்லி: மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடுகளை ஒன்றிய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தி உள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒன்றிய அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழு கூட்டம் டெல்லி விக்யான் பவனில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் வீரேந்திர் குமார் தலைமைய தாங்கினார்.

இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றறார்.

தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு செயலாளர் ஆனந்த குமார், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீதா ஜீவன் பேசியதாவது: ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு எப்போதும் முன்னணியில் இருக்கிறது. அதேப்போன்று பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 2.1 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் வழங்குவதற்கு ரூ.416.77 கோடி திட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதைத் தவிர மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வீதம் 4.2 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாநிலம் முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 2021-2022ம் நிதியாண்டில் ரூ.70.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இந்தியாவிலேயே, தமிழகத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் மூலம் கிடைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் வருமான அளவுகோல்களை தளர்த்தி, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விநியோகத்திற்கான முறை மற்றும் மொபைல் செயலியை உருவாக்க வேண்டும். இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசின் பங்கினை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.  பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்காக சேவை செய்யும் ஒரே தேசிய நிறுவனம் சென்னையில் மட்டுமே உள்ளது. எனவே என்ஐஇபிஎம்டி.யின் (NIEPMD) தற்போதைய நிர்வாக அமைப்பு மற்றும் சுயாட்சியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: