குறிஞ்சிப்பாடி: விழுப்புரம் - புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை(45ஏ) 6,300 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் - புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (45 ஏ ) 194 கி. மீ., இரண்டு வழி சாலை, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 180 கி. மீ., தூரமாக மாற்றியமைக்கப்பட்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரையிலான 29 கி. மீ., தூரத்திற்கு 1,013 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புதுச்சேரி முதல் பூண்டியங்குப்பம் வரை 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,228 கோடி ரூபாய் செலவிலும், பூண்டியங்குப்பம் முதல் சட்டநாதபுரம் பாளையம் 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2,120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2,004 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.