திருவள்ளூர்: அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாதை திட்டத்தை உடனடியாக கைவிட கோரியும், ஒப்பந்த ராணுவ வீரர்கள் முறையை புகுத்துவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் கோபால், முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, பா.சுந்தரராஜன், தமிழரசு, மோகனா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிடக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.