சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், சாய் பல்லவி. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்படுவதும், வடநாட்டில் மாட்டிறைச்சியை காரணம் காட்டி முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் மத வன்முறை’ என்ற கருத்தை சொல்லியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், ‘காஷ்மீர் தீவிரவாதிகளை, பசு பாதுகாவலர்களுடன் ஒப்பிடுவதா?’ என்று சிலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சாய் பல்லவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர். இந்நிலையில், தன்னை எதிர்ப்பவர்களுக்கு சாய் பல்லவி விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. சமீபத்தில் நான் அளித்த பேட்டி ஒன்றில், ‘நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? இடதுசாரி ஆதரவாளரா?’ என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் நடுநிலையானவள்’ என்று பதில் சொன்னேன்.