மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உப்பு தயாரிக்கும் பணியில் உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டில் குஜராத்துக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படும் நகரம் தமிழகத்தின் கடலோர மாவட்டமான தூத்துக்குடி. தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில், உப்பளத்துக்கு பெயர்போன ஊர் தூத்துக்குடிதான். இங்கு, அதிகமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச, உப்பு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் அமெரிக்காவும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளத்திற்கு கடல் நீர் கொண்டு வந்து பாத்திகளில் பாயச்செய்து காய வைத்து விடுவார்கள். கடல்நீர், வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். பின்னர், அடியில் உப்பு படிவுகளாக படிந்துவிடும். இந்த, உப்பு படிவுகளை கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும்.குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம். மேலும், பாத்தி கட்டுவது, உப்பை காய வைப்பது, வெட்டி எடுத்து சேர்த்து வைப்பது, லாரியில் லோடு ஏற்றுவது என எல்லா வேலையையும் தொழிலாளர்களே செய்கின்றனர். தொழிலாளர்களின், பாதுகாப்புக்காக கையுறையும், பூட்ஸ் ஷூவும் வழங்கப்படுகிறது. இங்கு, வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு ரூ 700, பெண்களுக்கு ரூ500 ஊதியமாக வழங்கப்படுகிறது.