ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள்: உ.தனியரசு பேட்டி

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும் என உ.தனியரசு தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உச்சக்கட்ட மோதலை தடுக்க சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 4வது நாளாக இன்றும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள சூழ்நிலையில், தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டதால், இப்போதைக்கு எடப்பாடி ஒற்றை தலைமை கோரிக்கையை கைவிடுவதா, அல்லது ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதா என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி தவித்து வருகிறார்.

அதேநேரம் புதிய சமரச திட்டத்துடன் எடப்பாடி அணியினர் தம்பிதுரை மூலம் இன்று ஓபிஎஸ்சுக்கு தூது அனுப்பியுள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல என்று கூறி கொங்கு நாடு பேரவை கட்சியின் உ.தனியரசு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; அதிமுகவின் தோழமை என்பதால் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுகவில் ஒற்றைத் தலைமை வருவது என்றால் அது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் வர வேண்டும். அதிமுகவின் முழு அதிகாரத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தன்வசப்படுத்தி வேண்டும்.

இந்த முறை பணிந்து போகக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தி உள்ளேன். ஒற்றைத் தலைமை பிரச்சனையில் வீட்டுக் கொடுக்க மாட்டேன் என்று ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார். 40 மாவட்டச் செயலாளர்களில் ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறு யாரும் எடப்பாடி பழனிசாமியை ஏற்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் மட்டுமே இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஓபிஎஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள் எனவும் கூறினார்.

Related Stories: