அம்பத்தூரில் வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி அதிமுக இரட்டை மாட்டு வண்டி: திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு

அம்பத்தூர்: அதிமுக இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளும் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சியில்  திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார். கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு வேருக்கு விழா மகிழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது. அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பேசினார்.

சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட திண்டுக்கல் ஐ.லியோனி, மோகன சுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது, கலைஞருடன் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட  பல்வேறு திட்டங்கள் குறித்து  விரிவாக பேசினார். அதன்பிறகு நிருபர்களை சந்தித்து திண்டுக்கல் ஐ.லியோனி கூறுகையில், ”அதிமுகவில் உள்கட்சி மோதல் மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். மக்களை திசை திருப்பும் நோக்கில் இத்தகைய நாடகத்தை அதிமுகவின் தலைமை அரங்கேற்றி வருகிறது.

அதிமுக இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளும் மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தலைமைக்கு என்று போட்டி வருகிறதோ அன்று அந்த இயக்கம் தரைமட்டமாகும் என அண்ணா கூறினார்.  அதுபோன்று அதிமுகவில் நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய தலைமை போட்டியால் தொண்டர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு போன்றவர். அத்தகைய ஆட்டை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். ஒருநாள் அந்த ஆட்டுக்கு மாலை அணிவித்து பலி கொடுப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்” என்றார்.  நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: