புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது கலவரத்தை தூண்டுபவர்கள் என யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்களது வீடுகளை புல்டோசரால் தரை மட்டமாக்குவதே புதிய வழிமுறையாக அம்மாநில அரசு செய்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் போபண்ணா, விக்ரம்நாத் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியூசிங், ‘சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை சந்தேகத்தின் அடிப்படையில் புல்டோசரால் இடிக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம். இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில், இதுபோன்ற அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பான சம்பவங்களை ஏற்று கொள்ள முடியாது’ என்றார். உ.பி. மாநில அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, ‘விதிமுறைகளை பின்பற்றிதான் கட்டுமானங்கள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட யாரும் நீதிமன்றத்தை நாடாதபோது, இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் எந்த முகாந்திரமும் இல்லை’ என்றார்.