நூபுர் ஷர்மாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்.! சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்து பாஜவால் அரசியல் செய்ய முடியுமா? கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதை கண்டித்து சென்னை அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று 2வது நாளாக ராகுல் காந்தியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்திருக்கிறது. இதை கண்டித்து, சென்னை, சத்தியமூர்த்தி பவன் நுழைவாயிலில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், துணை தலைவர் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி,  தாமோதரன், பொதுச் செயலாளர் இல.பாஸ்கர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்  செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாவட்ட  தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன்,  டில்லி பாபு, ரஞ்சன் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆலங்குளம் காமராஜ், சுமதி அன்பரசு, மயிலை தரணி  உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நூபுர் ஷர்மாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லை என்றால் தொடர்ந்து போராடுவோம். முகமது நபி பற்றி பேசினால் இஸ்லாமியர்கள் தான் போராட வேண்டும் என்பது தவறு. அவர்களுக்கு ஆதரவாக இந்துகளும் குரல் கொடுத்து போராட வேண்டும். சிறுபான்மையினரை ஒதுக்கி வைத்து நாட்டில் நீங்கள் அரசியல் செய்ய முடியுமா. இவ்வாறு அவர் பேசினார். 250 பேர் மீது வழக்கு: போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் நேற்று முன்தினம் சாஸ்திரிபவன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 250 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: