பட்டியலின மக்கள் குறித்து பேசிய விவகாரம் நடிகை மீரா மிதுன் மீது 22ல் குற்றச்சாட்டு பதிவு: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மீது வரும் 22ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் குறித்து, அவதூறாக பேசி சமூக வலைதளத்தில், நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக, பல்வேறு அமைப்புகள் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட, ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆகஸ்ட்டில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு, இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த வழக்கில், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சாம் அபிஷேக் ஆஜரானார். அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது நபரான சாம் அபிஷேக், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது என்றார். இதை ஏற்ற நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக, வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அன்றைய தினம், இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: