கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி 5 பெண்களின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்

நெல்லிக்குப்பம்:  கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரில் 5 பெண்களின் உடல்கள் ஒரே குழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஏ. குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (17), நவநீதா (20), சுனிதா (18), அயன் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பிரியதர்ஷினி (15), காவியா என்ற திவ்யதர்ஷினி (10) ஆகிய 7 பேர் கெடிலம் ஆற்றில் நேற்று முன்தினம் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இவர்களது உடல்கள், நேற்று முன்தினம் மாலை கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் அயன் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பிரியதர்ஷினி, காவியா என்ற திவ்யதர்ஷினி ஆகிய இருவரின் உடல் அவர்களின் சொந்த ஊரான அயன் குறிஞ்சிப்பாடி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கவி, பிரியா, மோனிஷா, நவநீதா, சுமிதா ஆகிய 5 பேரின் உடல்கள் ஏ. குச்சிபாளையம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று காலை அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வளாகத்தில் மிகப்பெரிய பந்தல் அமைத்து ஐந்து பேரின் உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது. ஐயப்பன் எம்எல்ஏ உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மதியம் 3 மணி அளவில் ஐந்து பேரின் உடலை தனித்தனி பல்லக்கு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: