ஜோலார்பேட்டை பிடிஓ அலுவலகத்தில் போலி மதுபானங்கள், கள்ளச் சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு: ஒன்றிய சேர்மன் பங்கேற்பு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை பிடிஓ அலுவலகத்தில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். பிடிஓ முருகேசன்(வ.ஊ) முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜா வரவேற்றார். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சதீஷ்குமார் பேசியதாவது: மது அருந்துவதால் உடல் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர் சேதம் ஏற்படுகிறது.

மேலும் மது அருந்துவதால் உடலுக்கு தீங்கானது மட்டுமல்லாமல் குடும்பம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக போலியான மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் அதிகமானோர் உயிரிழந்து தங்களின் குடும்பத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர்.

எனவே வருங்கால இளைஞர்கள் சமுதாயத்தை காக்க மது அருந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறான இந்த பழக்கத்தை கைவிட வேண்டும். தற்போது அதிக அளவில் இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கும் போது அதிக விபத்தும், மதுப்பழக்கத்தால் தற்போதைய உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே போலியான மது பானங்களையும், கள்ளச் சாராயத்தையும் அருந்துவதைத் தவிர்த்து உயிர் சேதத்தை தவிர்க்க வேண்டும். தங்களை நம்பியிருக்கும் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே. சதீஷ்குமார் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு துறை அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: