சென்னை: 2021-22 நிதியாண்டில் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்று வணிகவரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில், சுமார் 1.94 லட்சம் வணிகர்கள் ரூ.1,000-க்கும் கீழ் மட்டுமே கடந்த நிதி ஆண்டில் ஜிஎஸ்டி செலுத்தியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
வணிக வரி கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்திடுமாறு அவ்வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி 22,430 வணிகர்கள் ரூ.64 கோடியை அரசுக்கு செலுத்தியுள்ளனர் என்று வணிகவரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வணிகர்களை வரி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக ஏனைய வணிகர்கள் அனைவரும் உடனடியாக தங்களது கணக்கை சரிபார்த்து அரசிற்கு செலுத்த வேண்டிய வரித் தொகை ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக செலுத்தவேண்டும். இதன் மூலமாக அபராதம் மற்றும் வட்டியினை தவிர்க்குமாறு வணிகவரித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரி ஏய்ப்பு செய்துள்ளதை வணிக வரித் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் வரித் தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும் என்று வணிக வரித் துறை எச்சரித்துள்ளது.