சிஎஸ்கே கேப்டன் தோனி மீது வழக்குப்பதிவு

பீகார்: பீகாரில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற காசோலை பரிவர்த்தனை வங்கியில் செல்லுபடியாகவில்லை எனவும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன விளம்பரத்தில் தோனி நடித்து இருப்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயார்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி நியூ குளோபல் புரொடியூஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால் உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை என தெரிகிறது. இதனால் நியூ குளோபல் நிறுவனம் மீதம் இருந்த உரங்களை திரும்ப பெற்றுள்ளது.

ஆனால் அதற்க்குபதிலாக ரூ.30 லட்சம் காசோலையை வழங்கியுள்ளது. இந்நிலையில் காசோலையை வங்கியில் டெபாசிட் செய்தபோது அது செல்லுபடியாகவில்லை. இதுதொடர்பாக நியூ குளோபல் நிறுவனத்திற்கு டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பியநிலையில் அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து டிஎஸ் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் நீரஜ் குமார் நிராலா நியூ குளோபல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இதன் வழக்கில் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆர்யா உட்பட 8 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தால் இந்த வழக்கில் அவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை மஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. மேலும் அவர் இந்த விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: